Monday 16 February 2009

கொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை!

 

என்னிடம் வார்த்தைகள்

எதுவுமில்லை!

நான் உனக்காக

எதுவும்

எழுதப்போவதில்லை.

என் எழுத்துக்கள்

எவர் மனதும்

தொடாத போது!

 

படித்து கசக்கி

எறியப்படும் சொற்களால்

என்ன பயன்?

என் எழுத்துக்கள்

எதுவும்

செய்யப்போவதில்லை,

காற்றில்

கரைந்து மறைந்த

உன் அழுகுரல் போல்,

கன்னத்தில் உறைந்து

மறைந்த உன்

கண்ணீர் போல்,

 

நான் எதுவும்

எழுதப்போவதில்லை!

 

என் பேனாவின்

முனை கூர்தான்,

உனக்கு உணவளிக்காத

உன் மானம் காக்காத

என் பேனா எதற்கு?

 

பீரங்கிகளுக்கும்,

குண்டுகளுக்கும் பயந்து

ஓடும்  நீ

என் கதைகள்

படிக்கப்போவதில்லை!

 

துப்பாக்கியும்,தோட்டாக்களும்

துளைத்த உன்

உடலுக்கு என் வார்த்தைகள்

உயிர் தருமா?

 

உனக்குப் பயன்தராத

என் கணினி எழுத்துக்கள்

எதற்கு!

மன்னித்துக்கொள்!

என்னிடம் வார்த்தைகள்

எதுவுமில்லை!

கவிதைகளுமில்லை!!

No comments:

Post a Comment