Friday 6 March 2009

அன்புடன் ஒரு சிகிச்சை-3-ஏன் குழந்தைகளுக்கு முழங்கையில் அடிபட்டால் சுளுக்கு வலிக்கவோ மருந்து அழுத்தி தேய்க்கவோ கூடாது?

என்ன நண்பர்களே!!

தலைப்பே ஒரு பாரா இருக்கே என்று பார்க்கிறிர்களா?வேறு எப்படி வைத்தாலும் நான் சொல்ல வந்தது சரியாகப் புரியாது!

எனவேதான் தலைப்பிலேயே என்ன சொல்லப்போகிறேன் என்று சொன்னேன்! தலைப்பைப்படித்த்வுடனேயே உங்களுக்கு ஒரு ஐடியா வந்து இருக்கும்!!

ஏன் குழந்தைகளுக்கு முழங்கையில் விழுந்து அடிபட்டு வீங்கி இருந்தால்  மருந்து போட்டு உருவி விடக்கூடாது?  முழங்கை மட்டும் என்ன விசேஷம்? என்று நீங்கள் கேட்கலாம்!! கேட்காவிட்டாலும் நான் அதைத்தான் சொல்லப் போகிறேன்!!!

பொதுவாக கீழே குழந்தைகள் விழும்போது சாதாரணமாக கால்,கை போன்ற பகுதிகளில் அடிபடும்!! பெரும்பாலும் உருவி விட்டோ, களிம்புகளைத்தடவி விட்டொ அல்லது பக்கத்தில் உள்ள வைத்தியர்களிடம் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்காமல் கட்டுப்போட்டோ வைத்தியம் செய்கிறோம்.

எலும்பு உடைந்து இருந்தால் அந்த இடத்தில் முறையான சிகிச்சை செய்தால் இரண்டு எலும்புகளுக்கும் இடையில் புது எலும்பு உருவாகி இணைந்து விடும். குழந்தைகளில் இது மிக வேகமாக நடைபெறும்! நாம் சிகிச்சை முறையாகச் செய்தால் மிக விரைவில் குணமாகி விடும்!

ஆனால் முழங்கைப்பகுதியில் எலும்பு உடைந்தால் நாம் மிக அதிகமாக உறுவி விடும்போதோ,மிக அதிகமாக எலும்பை பிசைந்து இழுத்து எண்ணை போட்டு வலித்து விட்டால் எலும்பு மட்டும் இணையாமல் பக்கத்தில் உள்ள சவ்வு, மூட்டு உறை, தசைப்பகுதி ஆகியவற்றில் புது எலும்பு உருவாகிவிடும்!!!

1.முழங்கை எலும்பு சிறிது உடைந்து விலகாமல் இருந்தாலோ,

2.முழங்கை எலும்பு உடைந்து விலகி இருந்தாலோ,

3.முழங்கை மூட்டு விலகியிருந்தாலோ

குறிப்பாகக் குழந்தைகளுக்கும்

இளைஞர்களுக்கும்,

1.எண்ணை விட்டு நன்றாக வலித்துவிட்டுக்கட்டுவதோ, இல்லை

2.விலகியுள்ள எலும்பை இழுத்து கட்டுப்போட்டு ஒன்று சேர்க்கிறேன் என்றோ, இல்லை

3.விலகியுள்ள மூட்டு எலும்புகளை எடுத்து வைத்துக்கட்டுகிறேன் என்றோ

4.நாமே மூட்டு வலி எண்ணை,தென்னை மரக்குடி எண்ணை, கோடாலி தைலம் போட்டு உறுவி விடுகிறேன் என்றோ

செய்யவே கூடாது!!! 

மேலே குறிப்பிட்டபடி இப்படி செய்தால் ஏற்படும் தேவையில்லாத எலும்பு உருவாதலுக்கு,

மயோஸைடிஸ் ஆசிஃபிகன்ஸ் என்று பெயர். இதில் முழங்கை மூட்டை சுற்றியுள்ள சவ்வுகள்,தசைப்பகுதிகள்,தசைநாண்கள் ஆகியவற்றில் தேவையில்லாமல் புது எலும்புகள் உருவாகும் என்று மேலே சொன்னேன்.  இது முழங்கைப்பகுதி எலும்பு முறிவுகளில் அதிகமாக ஏற்படுகிறது!

அப்படி உருவானால் என்ன ஆகும்?

முழங்கையின் செயல் பாடுகள் குறைந்துவிடும்!!

முழங்கை முழுவதுமாக மடக்க முடியாமல் முழங்கை முன்புறம், பக்கவாட்டில் புதிய எலும்புகள் தோன்றி முழங்கை செயல்பாட்டைத்தடுக்கும்!!

இது ஏன் முழங்கையில் மட்டும் அதிகம் வருகிறது?

யாருக்கும் தெரியாது!!

இந்த ஒரு விசயம் ஞாபகத்தில் இருந்தால் போதும் நம்மைச் சுற்றீயுள்ள குழந்தைகளுக்கு இந்த பிரச்சினை வராமல் தடுத்து விடலாம்..

இது கொஞ்சம் எளிமைப்படுத்திக் கொடுத்து உள்ளேன்!!

விபரமாக வேண்டுமெனில் அடுத்த பதிவுகளில் பார்ப்போம்!!

No comments:

Post a Comment