Thursday 12 March 2009

பொண்ணு பார்க்க போறோம்!

நகைச்சுவையாக ஒரு சின்ன நிகழ்ச்சி!! இது நான் கல்லூரி படிக்கும்போது நடந்தது!

கல்லூரியில் ஹாஸ்டல் வாழ்க்கை என்பது எல்லோருக்கும் கிடைக்காதது! அதிலும் அருமையான நண்பர்கள் கிடைத்தால் அது சொர்க்கம்தான்!!

நாங்க படிக்கும்போது கரைஅரசன் என்று செல்லமாக நாங்க சொல்லிக்கொள்ளும் லெக்சரெர் ஒருத்தர் உண்டு!! அவரைப் பார்த்தாலே சிரிப்பாத்தான் இருக்கும்! அவர் பார்க்க மாநிறம்.. சுமாரான உயரம்! தலையை குளிருக்கு இரண்டு தோள்களுக்கும் நடுவில் வைத்து இருப்பது போல் வைத்து இருப்பார். யாருடனும் பேசமாட்டார்.  ஆனால் நடந்து போகும்போது கையைக்கூட ஆட்டாமல் அவரே பேசிக்கொண்டு போவார்!!!

காலேஜ் போனவுடனேதான் நமக்குயாரைப்பார்த்தாலும் நக்கலாத்தானே இருக்கும்!! அப்படியே உலகத்துலேயே வேற யாரும் ஈடில்லைன்ற மாதிரி மக்கள் ஒரே மப்பா அலைவானுங்க! நம்மளும்தான்!!

அப்பல்லாம் விவரம் புடிபடாத வயசுதானே!!! +2 முடிச்ச கையோட கல்லூரிக்குள்ள போறோம்! அப்படித்தானே இருக்கும்!!

சரி! கதைக்கு வருவோம்!!! நம்ம கரைஅரசனோட வகுப்பு ரொம்ப கலகலப்பா இருக்கும்! ஒரே லூட்டிதான்! பேப்பர் ஏரோ க்கள் பறந்துகொண்டே இருக்கும்!!

பாதிபேர் அட்டண்டன்ஸ் குடுத்துட்டு பின் பக்கம் வழியா போய்கிட்டே இருப்பாங்க. தலயும்(லெக்சரெர்) பாதி கிளாஸ் எடுத்துட்டு போயிடும்!!பசங்க இருந்தாதானே கிளாஸ் எடுக்க முடியும்!!

இப்படியாகப்பட்ட நேரத்தில்    நம்ம தோஸ்துகள் இருவர் எப்படியோ கரைஅரசன் மேல் அனுதாபம் கொண்டு சந்தேகம் கேட்கிற மாதிரி  குவார்ட்டர்ஸ் போய் பேசி பழக்கமாயிட்டாங்க! குவார்டர்ஸில் அவர் தனியாகத்தான் இருந்தார்! வயதான அம்மா, அப்பா கிராமத்தில் இருந்தார்கள்!

பல சந்தேகம் கேட்டு ,கதைகளைப் பேசி ஒரு வழியா அவர் கிட்ட பழகி அவரைப்பத்தி எல்லா விசயத்தையும்கறந்து ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புது விசயத்தோட வருவானுங்க!! நாங்க அதைக் கதையாக் கேப்போம்!!

ஒரு தடவை அப்படித்தான் ஒரு அதிர்ச்சித்தகவலோடு வந்து ரொம்ப ஃபீலிங்காயி மேட்டரை சொல்லிச்சு மக்கள்!!! ஒன்னும் இல்லை!! அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னுதான்!!!(இது ஒரு பெரிய மேட்டரா?)

பார்க்கிற பெண் வீட்டிலெல்லாம் ரிஜெக்ட் ஆயி இண்டெர்வியூவில் பெயிலான மாணவனா தன் சோகத்தை பசங்கட்ட சொல்லியிருக்காரு!!!

”கரையரசன் ஆதரவாளர்கள்” முக்கியமா இரண்டு பேர் 1. ”அண்ணன் கனக்கு” (கனகராஜ் அண்ணனை செல்லமா அப்படித்தான் கூப்பிடுவோம்)  2.எம்.எம்.சாமி, ஆம்பிளைப்பிள்ளை வேண்டிப்பிறந்ததால் மூக்குசாமி என்று மூக்குக்குத்தி அப்பா அம்மா ஆசையா வச்ச பேரை அசிங்கமா?- எம்.எம்.சாமியா மாத்திகிட்டவர்!!

இருவரும் ரொம்ப டென்சன் ஆயி ”தல”க்கு எப்படியாவது பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிவிடனும்னு முடிவு பண்ணியாச்சு!!

”இதுக்கு முன்னாடி போய் பொண்ணு பார்த்தது ஏன் சரிவரலை”ன்னு கேட்டோம். அதற்கு நம்ம லெக்சரரோ அவனுங்க,(அதாவது பொண்ணு வீட்டார்) ”ஏதேதோ புரியாததைக்கேட்டு குழப்புறான்க” என்றார்!

அவரிடம் பொதுவான சில கேள்வி கேட்டோம். எங்களையே குழப்பினார்..உலக அறிவு சுத்தம். பேப்பர் கூட படிக்கமாட்டார் போலத்தெரிந்தது!

அண்ணன் கனக்குவின் அண்ணன் ஒருவர் பி.எச்.இ.எல் லில் வேலை பார்த்து வந்தார்!! அவரிடம் சொல்லி புரொக்கர் மூலம் வரன் தேடி ஒரு ஞாயிறு பெண் பார்க்க போவது என்று முடிவானது!!

சரி! இந்ததடவை நாங்க கூட்டிப்போறோம்..நீங்க அவங்க எது கேட்டாலும் எங்களைப்பாருங்க! நாங்க   மேலே கீழே தலையாட்டினா ஆமா!! சைடில் தலயாட்டினா இல்லை!!ன்னு சொல்லணும் !!!

வேறு எதுவும் பேசக்கூடாது என்று சொன்னோம்! சரி என்றார்!

பொண்ணு வீட்டில் நல்லா காபி, வடை சாப்பிட்டோம்!!

தலைவர் அமைதியா இருந்தார். பொண்ணு நல்லா இருந்தது!! என்ன மாப்பிள்ளை ஒரு வார்த்தைதான் பேசுகிறார்!!ன்னு பொண்ணு அப்பா கேட்டார்!! அமைதியான டைப்பு!! ரொம்ப பேசமாட்டார் என்றோம்!!விசயம் எல்லாம் நல்லபடியாக முடிந்தமதிரிதான்.

சரி! நாங்க போய் சொல்றோம்ன்னு சொல்லிவிட்டு வெளியே வந்தோம்!!

எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி!! அப்பாடி ஒரு வழியா சாதித்து விட்டோம்! எங்களுக்குள் பார்த்துகொண்டோம்!! சாதித்த பெருமை எங்கள் எல்லோர் முகத்திலும்!

ஹாலிலிருந்து வராந்தா வந்தோம்! வராண்டா எதிர் சுவரில் ராஜாஜி படம் தொங்கிக்கொண்டு இருந்தது!

இதுவரை நல்லா வந்த நம்ம ஆள் படைத்தைப் பார்த்து “இது உங்க அப்பாவா?” என்று பெண்ணின் அப்பாவைப் பார்த்துக்கேட்டார்.

பெண் அப்பாவுக்கு ஒன்னும் புரியவில்லை! என்ன சார் கேக்கிறீங்க? என்றார்..

இல்லை முகஜாடை உங்களை மாதிரி இருக்கேன்னு கேட்டேன்.. எங்களுக்கு புரிந்து விட்டது!!

வாங்க பாஸ் !!! வாங்க!! என்று லெக்சரரை இழுத்துக்கொண்டு ஒரே ஒட்டமாக வந்து டாக்ஸியில் ஏறிப்பறந்தோம்!  பெண்ணின் அப்பா ஏதோ கத்திக்கொண்டு இருந்தார்... எங்கள் காதில் விழும் தூரத்தை எப்பவோ கடந்து விட்டிருந்தோம்!

பி.கு.: நாங்க கல்லூரி முடிக்கும்வரை நம்ம கதாநாயகனுக்கு கல்யாணம் ஆகவில்லை!!

No comments:

Post a Comment